articles

img

உணவும் தீட்டும் சூத்திரர் கள் இறைவனுக்குப் பலியிடும் தகுதியற்றவர்கள்

      இந்திய சமூக வரலாற்றை நான்கு கட்டங்களாக பிரித்து சாதியும், இனமும் என்ற நூலில் குறித்துள்ளார் ஜி.எஸ்.சூர்யே.

      வேத காலத்தில் சமுதாயம் பிரம்ம, சத்திர, விசு என்ற மூன்று சமுதாய பிரிவுகள் மட்டுமே இருந்தன என மேற்காண் நூலில் அவரே குறிப்பிடுகிறார். நான்கா வது பிரிவாகிய சூத்திர இனம் கி.மு. ஆறாம் நூற்றாண் டுக்கு முன்பே உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். சூத்திரர் கள் இறைவனுக்குப் பலியிடும் தகுதியற்றவர்கள். சூத்திரர்கள் இறைவனை வணங்கும் உரிமையை மறுத்ததும் இறைவன் பெயராலே நடைபெற்றது.

     மூன்றாம் நூற்றாண்டில் அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியன் நான்கு வர்ணங்களையே குறிப்பிடு கிறார். அதற்குப்பின் மனுநீதி சாஸ்திரம் கலப்பு சாதியினர் உருவானதைத் தெரிவிக்கிறது. அனுலோமர், பிரதி லோமர் பற்றியும் மனு எழுதிய மனுதர்ம சாஸ்திரத்தில் விவரிக்கப்படுகின்றன.

    மனு எழுதிய மனுதர்ம சாஸ்திரத்தில் முதலாவது அத்தியாயத்தில் நான்கு வருணத்திற்கான கடமைகள் விவரிக்கப்படுகின்றன. ஏவலாளர்களான சூத்திரர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூவருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவர் எனத் தெரிவிக்கிறது.

     கலப்பு சாதிகள் தோற்றம் பற்றி 10 ஆவது அத்தி யாயத்திலும் உணவு, தீட்டு பற்றி ஐந்தாவது அத்தியாயத் திலும் சொல்லப்படுகிறது. சூத்திர வருணத்தவர்க்கு வைசிய மனைவி பெற்ற பிள்ளை ஐயோகவன். சத்திரிய மனைவி பெற்ற பிள்ளை சத்தா. பார்ப்பனப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை சண்டாளன். சாதியின் தன்மைகளை கீழிருந்து பார்த்தால் அவற்றில் மிக முக்கியமானது தீண்டாமை. தீட்டு என்னும் எல்லையே தீண்டத் தகாதவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது.

     ஒருவகையில் பார்த்தால் தீண்டாமை பற்றிய கருத்து என்பது தீட்டு என்பதன் நீட்சியாகவே வந்தது எனலாம். தீட்டு அல்லது தூய்மை பற்றிய கருத்தால் ஏற்பட்டது எனலாம். எனினும் தீட்டு என்னும் கருத்தியலை விட தீண்டாமை என்பது மேலும் கூர்மையானது. தீட்டு அல்லது தூய்மையின்மை குறித்து மனுநீதியில் அத்தியாயம் ஐந்தில் அனைத்து சாதியினர்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படுகிற தீட்டு குறித்தும் அதை எத்தனை நாள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றுகிறது. இது பொதுவானது.

    ஆனால் விலங்குகளிடம் இல்லாமல் தீண்டாமை எப்படி மனிதர்களை தொற்றிக் கொண்டது என்பது இந்திய சமூகத்தில் நிகழ்ந்த வித்தியாசமான கொடுமை யான நிகழ்வு.

    நான்கு வருணத்தில் சூத்திரர்கள் அடிமைகளைப் போல மற்ற மூன்று இனத்தவர்களுக்கும் சேவை செய்ய வேண்டியவர்கள். பல்வேறு தீண்டாமைக்கு கிமு ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே இவர்கள் ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள். சமூகம் இழிவானது என்று கருதிய தொழிலைச் செய்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக உருவாக்கப்பட்டிருக்கலாம். (1901 இல் செய்யப்பட்ட மைசூர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாகம் 400)  

     இன்றுள்ள சமூக நிலையில் மக்கள் சமுதாயம் எந்த இடத்தில் உள்ளது என்று எளிதில் வேறுபடுத்த இயலாது. பிராமணர்கள் ஒரு முனையிலும், தரம் தாழ்த்தப்பட்ட புலையர் இன மக்கள் மறுமுனையிலும் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள இடைநிலை சாதியினர் தங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை காட்டித் தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொள்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1911இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீண்டத்தகாதவர்களைத் தனியே பிரித்துக் காண்பதற்குப் பத்து நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி 1.பிராமணர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள் என கொள்ளாதவர்கள், 2. பிராமண குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள். 3. வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள். 4. பெரிய இந்து கடவுள்களை வழிபடாத வர்கள். 5. நல்ல பிராமண சேவை அளிக்கப்படாதவர்கள். 6. புரோகிதர்களே இல்லாதவர்கள். 7. சாதாரண இந்து கோயில்களில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படா தவர்கள். 8.தீட்டு ஏற்படுத்துபவர்கள். 9. தங்களில் இறந்த வர்களைப் புதைப்பவர்கள் 10. பசுவைப் புனிதமாகக் கருதாதவர்கள். மாட்டிறைச்சி உண்பவர்கள். என இவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை யில் தீண்டத்தகாதவர்கள் பிரிக்கப்பட்டனர். (டாக்டர் அம்பேத்கர் தனது தொகுப்பு நூல் ஒன்பதில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்)

     இந்திய நாட்டின் மக்கள் ஒரு மொழி பேசுவதால் அந்த மொழிசார் மக்களாகவும், ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்த சாதி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு மொழிப் பிரதேசத்திலும் 50 முதல் 100 வரை சாதிகளும், 500 முதல் 1000 வரை உபசாதிக் குழுக்களும் இயங்கி வருகின்றன. இவைகள் அகமண முறை, உணவு மற்றும் சடங்குகள் ஆகியவற்றால் தங்களை சமூகத்தில் வேறுபடுத்திக் கொண்டு தங்களது சமூகப் பாதுகாப்பை நிலைநிறுத்தி வருகின்றனர்.

    கிராமங்களால் ஆன இந்தியாவில் 30 சாதிகள் வரை கொண்ட அமைப்பாக கிராமங்கள் இயங்கி வருகின்றன. பல மாநிலங்களில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பும் பின்பும் சாதிக்கு சாதி வரியும் வேறுபாட்டுடன் விதிக்கப் பட்டுள்ளன.

   சாதி இறுக்கம் கொண்ட இந்திய சமூக அமைப்பில் தீட்டு என்பது ஒரு சாதி உறுப்பினர் தங்களைவிட உயர்ந்த சாதியினராக உள்ள சாதிகளிடம் எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்பது கெட்டிபட்டு இயங்கி வந்திருக்கின்றன. தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், நிழல்படக்கூடாது. தெருக்களில் நடக்கக் கூடாது என இந்தியாவின் பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்துள்ளது. இந்த தீட்டு முறைகள் தற்போது வெளிப் படையாகத் தெரியாவிட்டாலும், நிறுவனம் ஆகி மக்கள் மனதில் தற்போதும் இயங்கி வருகின்றன.  

      பல இடங்களில் அப்போது வெளிப்பட்டுக் கலவரங்களாகவும் மாறு கின்றன. இந்த தீட்டு மனப்பான்மைக்கும், உணவுக்கும் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. சாதிய சமூகத்தில் படிநிலை சாதிய அமைப்பு முதன்மையாகத் திகழ்கிறது. எந்த சாதியினரிடமிருந்து உணவு அல்லது குடிநீரை பெறுவது என்பதில் நுட்பமான, இறுக்கமான விதிகள் பின்பற்றப்படுகின்றன. இரு பிறப் பாளராக மட்டுமல்ல, தூய்மைக்கேடான சாதிகளிட மிருந்து வைதீக இந்துக்கள் குடிநீர்  பெறுவதில்லை. எந்த தனிநபரும் தனது சொந்த சாதிகள் தவிர்த்து வேறு எவரிடத்தும் சாதாரண உணவுகூட பெற தடை உள்ளது. அது இன்றளவும் நாடு முழுவதும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.

    பிராமணர் சமைத்த உணவை அனைவரும் ஏற்றுக் கொள்வர். பிராமணர் அல்லாத இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் சமைத்த உணவை தீண்டத்தகாதவர்கள் ஏற்றுக் கொள்வர். ஆனால் தீண்டத்தகாதவர்கள் சமைத்த உணவை மற்ற சாதியினர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற நடைமுறை இன்றளவும் எங்கும் உயிர் பெற்று வாழ்கின்றது.

    இந்திய சுதந்திரப் போராட்ட காலங்களில் சமபந்தி போஜனத்திற்கான கருத்துகள் பெயரளவில் முன்னுக்கு வந்தபோதும் அதை நடைமுறைபடுத்த விடுதலை போராட்டத்தில் முன் இருந்த காங்கிரஸ்காரர்களால் முடியவில்லை.  

    தமிழகத்தில் சேரன் மாதேவியில் நடைபெற்ற குருகுலப் போராட்டம் சம்பந்தி போஜன வரலாற்றை பற்றி விரிவாகச் சொல்லும்.

    பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும் நகரங்களில் ஆங்கிலேயர்கள் வசதிக்காக உணவு. தங்குமிடங்களுக் காக பெரும் ஓட்டல்கள் கட்டப்பட்டன. அதன் பின் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் உணவு விடுதிகள் நாடெங்கும் பரவின. ஆதிகாலம் தொட்டு இருந்த சத்திரம், சாவடிகள் மெதுவாக மறையத் தொடங்கின. சிறு நகரங்கள் உட்பட ஹோட்டல் கள் உருவாகின. இந்தப் பொது உணவகத்திலும் பிராமணாள் கபே தனித்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் உள்நுழைய அனுமதி இல்லை என்று சிறு உணவு விடுதிகளும் மறுத்தன.

    தொடர்ந்து உணவு விஷயம் இந்திய வரலாற்றில் சாதிகளுடன் பயணப்பட்டது. உணவு விடுதிகளை கட்டி உணவு வணிகம் செய்தவர்கள் உயர்சாதியினரும் மேல்நிலைப் படிகளில் உள்ள சூத்திர சாதியினர் மட்டுமே. விடுதலை பெற்ற பின் சுதந்திர இந்தியாவில் தீண்டத் தகாதவர்கள் உணவு விடுதிகளில் அனுமதிக்க கோரி போராடியபொழுது வெளியே நின்று அல்லது தரையில் அமர்ந்து கொண்டு உண்ண மட்டும் அனுமதி கிடைத்தது. படிநிலையில் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட சிறு பாத்திரங்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. ஒருவரது சொந்த உணவை தனது சாதியினத்தவரைத் தவிர வேறு எவரிடத்தும் சாதாரண அதாவது தண்ணீரில் வேக வைத்த உணவைப் பெறுவது போன்ற சிறு, சிறு அசைவு கள் கிராமங்களின் நிகழ்ந்திருந்தாலும், தம்மைவிட கீழ்நிலையில் உள்ள சாதியினர் சமைத்த உணவை ஒருவரும் ஏற்றுக்கொள்வதில்லை. நகரங்களில் இன்று புலம்பெயர்ந்தவர்களால் சற்று மாற்றங்கள் அடைந்துள்ளன.

     ஆனால் நகரங்களில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராம உணவு விடுதிகளில் தீட்டு உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால் இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது.